வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டின் நிலவும் வானிலை நிலைமை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
நேற்று (17) பதிவான தரவுகளின்படி, நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
அங்கு 128.9 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, நாட்டின் மிகக்குறைந்த வெப்பநிலையாக 13.4°C நுவரெலியா மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
இலங்கையின் தென்கிழக்கே, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக, காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். ஏனைய கடலோரப் பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது. கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணிக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக களுத்துறை முதல் புத்தளம் மற்றும் மன்னார் வரையான கடற்பரப்புகளிலும், மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ காணப்படலாம். குறிப்பாக இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன், கடல் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
